dc.description.abstract |
இலங்கையில் பல சகாப்தங்களாக நடைமுறையிலிருந்த முஸ்லிம் சட்ட மரபும் அது முஸ்லிம்
விவாக விவாகரத்துச் சட்டமாக (MMDA) அங்கீகாரம் பெற்றமையும் 1931இல் காழி
நிதிமன்றங்கள் நிறுவப்பட்டு தொழில்படுவதற்கு வழிகோலியது. முஸ்லிம் குடும்பப்
பிணக்குகள் இந்த நிதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்டவை. இவ்வாய்வுக் கட்டுரை இலங்கை காழி நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படும் குடும்ப வழக்குகள், அவற்றைக் ‘காழி’கள் கையாளும் முறைமை என்பன பற்றிப் பகுப்பாய்வு செய்கிறது. காழி நீதிமன்றம் மற்றும் வழக்காளிகளிடம் பெறப்பட்ட முதன்மை நிலைத் தரவுகளைப் பிரதான
அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வு மேற்சொன்ன விவகாரம் தொடர்பான இலக்கியக்
குறிப்புக்கள், அது தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டங்களை அவ்வப்போது இணைத்துக் கலந்துரையாடுகிறது. பொதுவாக ‘தலாக்’, ‘பஸ்ஹ்’, ‘குல்உ’, ‘முபாரஆ’, பிள்ளைத் தாபரிப்பு, மனைவித் தாபரிப்பு, ‘இத்தா’ தாபரிப்பு, இருப்புச் செலவு, கைக்கூலி, ‘மஹர்’, ‘மதா’, ‘வலி’ ஆகிய விடயங்களே ‘காழி’ நிதிமன்றங்களில் வழக்காடப்படுகின்றன. ஆயினும், பிள்ளைத் தாபரிப்பு வழக்குகளே ஒப்பீட்டளவில் முன்னிலை வகிக்கின்றன. அவை தொடர்பான காழிகளின் தீர்ப்புகளே பெருமளவில் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கின்றன. விளைவாக, அத்தீர்ப்புகள் மேலவையில் (Board of Quazi) வாலுக்குற்படுத்தப்படுகின்றமையும் அதிகரித்துக் காணப்படுகின்றன. எனவே, அவ்வழக்குகளை வெளிப்படையான வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் மாத்திரம் அணுகாமல், குடும்பவியல், சமூகவியல் பின்னணிகள், காரணிகளுடன் இணைத்து நோக்குதல் காழிகள் குடும்பப் பிணக்கின் யதார்த்தத்தைத் துல்லியமாக அறிவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அதேவேளை, குறித்த தம்பதியினருக்குப் பக்கசார்பற்ற, நியாயமான தீர்ப்பினை வழங்கவும் துணைசெய்யும். இவ்வாய்வு காழி நீதிமன்றங்களின் புனரமைப்புக்கான விதந்துரைகளுக்கு
அடிப்படை அம்சங்களை வழங்கவல்லது. |
en_US |