Abstract:
இஸ்லாம் செல்வச் சுழற்சியின் ஓர் அங்கமாக நிர்ணயித்திருக்கும் மகத்தானதொரு பொருளாதார முறையே வாரிசுரிமைச் சட்டமாகும். இச்சொத்துப் பங்கீடு நியாயமான முறையில் ஆண்கள், பெண்களுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்கப்படுவதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. இப்பொருளாதார திட்டம் சரியான முறையில் இடம் பெறுவதற்கு இது தொடர்பில் ஒவ்வொரு முஸ்லிமும் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியமாகும். அந்த வகையில் ஆய்வுப் பிரதேசமான சம்மாந்துறை, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். இம்மக்களிடையே இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை மதிப்பீடு செய்தல், குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காண்பதோடு, மற்றும் இஸ்லாம் கூறுகின்ற அடிப்படையில் வாரிசுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழிவுகளையும் முன்வைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்பு மற்றும் அளவுசார் முறையில் அமைந்துள்ள இவ்வாய்வில் முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தரவுத் திரட்டின் முதல் கட்டமாக குடித்தொகை மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட (எண்ணிக்கை) ஆய்வுமாதிரிகளிடம் திறந்த வினாக்கொத்து (Open-Ended Questionnaire) வழங்கப்பட்டுள்ளதுடன் நோக்க மாதிரி (Purposive Sample) அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 14 நபர்களுடன் அரை கட்டமைக்கப்பட்ட நேர்காணல் (Semi- Structure Interview) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்காக Ms Excel 365 பயன்படுத்தப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் கருப்பொருள் பகுப்பாய்வு (Thematic Analysis) முறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் கோட்பாட்டுக் கட்டமைப்பினை ஆக்கபூர்வமாக வடிவமைப்பதற்காக புத்தகங்கள், சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள், இணைய ஆக்கங்கள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.அதனுடன் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான தகவல்கள் கோட்பாட்டு ரீதியில் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் இப்பிரதேச மக்களிடம் வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான அறிவுநிலை போதாமை காரணமாகவே இச்சமூகத்தில் தவறான பிரிப்பு முறை இடம் பெறுவதனால் குடும்பங்களுக்கு மத்தியில் கைகலப்பும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு கொண்டு இறுதியில் கொலையில் சென்று முடிவடைவதனையும் காண முடிகின்றது. எனவே இச்சட்டம் பற்றிய பூரண விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு எதிர்கால ஆய்வாளருக்கான ஆலோசனைக ளையும் இவ்வாய்வின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.