Abstract:
வக்ஃபு நிறுவனமானது உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் சமூக மதம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் வரலாற்று ரீதியிலே மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. எதிர்பாரா விதமாக காலனித்துவத்தின் விளைவாக சமூக முன்னேற்றத்திற்கான அதன் மிகப் பெரும் வகிபாகத்தை குறைவடையச் செய்தது பல அறிஞர்கள் மற்றும் அரசுகளும் இந்த வக்ஃபு நிறுவனத்தை மீள் உயிர்பிப்பதன் மூலம் இந்த முஸ்லிம் சமூகத்திற்கு அதன் மூலம் கிடைக்கப்பெறும் முழுப்பயனையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் முயற்சி செய்கிறது. இந்த ஆய்வானது முஸ்லிம்களை 7.5% என்ற வீதத்தில் சிறுபான்மையாக கொண்ட இலங்கை நாட்டில் இந்த வக்ஃபு சொத்துக்களின் முகாமைத்துவ நடைமுறை எவ்வாறு காணப்படுகின்றது என்பதை ஆய்வு செய்யும் வகையிலே அமையப்பெற்றுள்ளது. அத்தோடு வக்ஃபு தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடும் ஷரீஆவின் வரையறைகளும் எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பான விரிவான ஒரு விளக்கத்தினை வழங்குவதோடு மேலும் இவ்வாய்வானது இலங்கையின் வக்ஃபு சட்ட நடைமுறை மற்றும் அனைத்து வக்ஃபு சொத்துக்களினதும் நிர்வாக முறைமை என்பவற்றை கண்டறிந்து மதிப்பீடு செய்து, இலங்கை முஸ்லிம் சிறுபான்மையினருக்கான வக்ஃபு சட்ட நடைமுறைகள் மற்றும் அதன் முகாமைத்துவம் என்பவற்றினை மேலும் சிறப்பாக கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.. இவ்வாய்வானது பண்புரீதியான ஆய்வாக காணப்படுகின்றதோடு இங்கு முதலாம்நிலைத் தரவாக குறிக்கோள் மாதிரியை பிரயோகித்து நேர்காணல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நேர்காணல் ஆனது அரைக் கட்டமைப்பு முறையின் அடிப்படையிலும் அமையப்பெற்றுள்ளதோடு நேர்காணலில் மொத்தமாக 8 பேர் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்நேர்காணலுக்காக இலங்கை வக்ஃபு சபை (Waqf Board of Sri Lanka ) உறுப்பினர்கள் மற்றும் அதன் பணிப்பாளர் போன்றோரும், இலங்கை வக்ஃபு முகாமைத்துவ நடைமுறையோடு அனுபவமுள்ள முதிர்ச்சி பெற்ற இஸ்லாமிய தலைவர்களும் தனிப்பட்ட நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு அமையப்பெற்றுள்ளது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளுக்கு அமைவாக இலங்கை வக்ஃபு சொத்துக்களின் சமாகல முகாமைத்துவ நடைமுறை ஆனது மிகவும் உதாசீனம் செய்யப்பட்டு வருவதோடு வக்ஃபு சொத்துக்களின் அடிமட்ட முகாமையாளர்களிலேயே பல்வேறு சொத்து மோசடி மற்றும் ஊழல் என்பன இடம்பெற்றும், அதே போன்று வக்ஃபு சொத்துக்களை முகாமை செய்யும் உயர் நிறுவனங்களின் போதியளவு செயல்திறன் இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களினால் இன்றைய இலங்கை வக்ஃபு சொத்துக்களினது முகாமைத்துவம் பின்னடைந்து காணப்படுகின்றது என்பதை புலப்படுத்துகின்றது.
எனவே இஸ்லாமிய வரலாற்றில் இந்த வக்ஃபுத் துறையினுடைய அந்தஸ்தினையும், அது அல்லாஹ்வின் சொத்தாக கருதப்பட்டு அமானிதமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் முழு இஸ்லாமிய சமூகத்திற்கும் அதன் பிரயோசனம் சென்றடைய வேண்டும் என்பதற்குமான பல்வேறு அவசிய நடவடிக்கைகள் மேற்கொள்வது இன்றைய இலங்கை வக்ஃபுத் துறை தேவைப்பாடு உடையதாக காணப்படுகின்றது. எனவே இவற்றிற்கான ஒரு சில ஆலோசனைகளும் இவ்வாய்விலே முன்வைக்கப்பட்டுள்ளது.