Abstract:
பொருளாதாரச் செயற்பாடுகளில் பெண்களின் நிலை குறித்து பல்துறைசார் ஆய்வுகள் இடம்பெற்றவண்ணமுள்ளன. எனினும் பெண்களின் பொருளாதார ரீதியான வகிபாகம் மிகவும் குறைவாகவே உள்ளது. வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வழிகாட்டல்களை வழங்கும் இஸ்லாததில் பெண்களின் பொருளாதார உரிமைகள் தொடர்பான அதன் கரிசனையும் வலுவானதாகும். அந்தவகையில் இவ்வாய்வு அக்குரணைப் பிரதேச முஸ்லிம் பெண்களின் பொருளாதார உரிமைகளின் நடைமுறையை பரிசீலித்து அது தொடர்பான இஸ்லாமிய நோக்கினை விளக்குகிறது. குறிக்கோள் மாதிரி முறையில் 237 பெண்களிடமிருந்து பெறப்பட்ட அளவை வினாக்கொத்து, அவர்களில் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட 11 பேர் மற்றும் சமூகத்தில் புத்திஜீவிகள், மதத்தலைவர்கள் போன்றோரில் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட 12 பேருடனும் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மற்றும் கள அவதானத்தினூடாக பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் இவ்வாய்வு இலக்கிய மீளாய்வின் மூலம் தனது கோட்பாட்டு அமைப்புத் திட்டத்தை நிறுவியுள்ளது. பெண்களின் குடும்பப் பொறுப்புக்களே முதன்மையாகக் கருதப்படுவதால் அவர்களின் தொழில் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகிறது. குடும்பத்தில் பொருளாதார ரீதியான முடிவுகளை மேற்கொள்வதில் பெண்கள் குறிப்பிடத்தக்களவு பங்குகொண்ட போதும் பொருளாதார ரீதியாக குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு ஆணைச் சார்ந்திருப்பதால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அவர்களையே சார்ந்துள்ளது. அதனைப் பெண்களும் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் உள்ளனர். சொத்துரிமையை உட்பட ஏனைய பொருளாதார உரிமைகளை பெண்கள் அனுபவித்தபோதும் அவற்றில் ஆண்களின் தலையீடு அதிகரித்துக் காணப்படுகின்றமையினால் ஆய்வுப் பிரதேசத்தில் பெண்களின் பொருளாதாரச் செயற்பாடுகளின் நடைமுறை பூரணமாக இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு உட்பட்டது எனக் கூறுவதில் ஏற்பு இல்லை. வாரிசு சொத்தில் ஆண்களை விட பெண்களே அதிக சொத்துக்கள் பெறும் நிலை உள்ளதால் இது பாரம்பரிய இஸ்லாமிய வாரிசுரிமைச் சொத்துப் பங்கீட்டு விதிகளுக்கு முரணாக அமைந்துள்ளது. ஆய்வுப் பிரதேச வழக்காறுகள், இஸ்லாமிய ஷரீஆ பற்றிய புரிதலின் அளவு, கல்வி மட்டம், சமூக நிலை போன்ற விடயங்கள் பெண்களின் பொருளாதார உரிமைகளின் நடைமுறையில் தாக்கம் செலுத்தும் காரணிகளாகும். மகளிர் வலுவூட்டல் மற்றும் பெண்கள் தொடர்பான ஏனைய ஆய்வுகளுக்கும் இந்த ஆய்வை வாசிப்பாகக் கொள்ள முடியும்.