Abstract:
இஸ்லாம் மார்க்கமானது நம்பிக்கை, கலாசாரம், சட்டம், நீதி, நியாயம் மற்றும் சமூக ஒழுங்கை உள்ளடக்கிய ஒரு மார்க்கமாகும். இறைவனின் கட்டளையை மீறும் பட்சத்தில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குற்றமில்லாத சமூகத்தைக் கட்டி எழுப்பவே இஸ்லாம் ஆசைப்படுகிறது. இன்றைய சமூகத்தில் நாளுக்கு நாள் பல்வேறு வகையான குற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இந்த வகையில் இலங்கை சமூகத்தில் இடம்பெறுகின்ற சில குற்றங்களை ஆராய்ந்து அவற்றுக்கான இஸ்லாமிய தண்டனைகள் குறித்து விரிவாக விளக்குவதோடு குற்றங்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்ற நியாயாதிக்கத்தையும் தெளிவான விளக்கத்தையும் விரிவாக விளக்கி சமூக சீர்கேடுகளில் இருந்து சமூகத்தை பாதுகாப்பதற்கான அல்லது இழிவளவாக்குவதற்கான பரிந்துரைகளை முன்வைத்து ஒரு தெளிவான இஸ்லாமிய கோட்பாட்டை சமூகத்திற்கு விளக்குவதற்கு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வு இரண்டாம் நிலை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், ஆய்வுக் கட்டுரைகள், இணைய குறிப்புகள், ஒலிநாடாக்கள் மற்றும் இதர வெளியீடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. விளக்கவியல் மற்றும் பகுப்பாய்வு முறைமைகள் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய குற்றவியல் கோட்பாட்டை விளக்கி குற்றங்களையும் சமூக சீர்கேடுகளையும் குறைப்பதற்கான ஒரு வழிமுறையை கையாள்வதோடு இஸ்லாமிய குற்றவியல் கோட்பாட்டை அலசி ஆராய்கின்றது என்ற வகையில் இவ்வாய்வானது முக்கியத்துவம் பெறுகின்றது.