Abstract:
முஸ்லிம்கள் தமது வாழ்வியலை இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட வகையில் அமைத்துக்கொள்வது அவசியமானது. இருந்தபோதிலும் ஷரீஆவின் அமுலாக்கம் சிறுபான்மைச் சூழலில் சவால்மிக்கது. அந்தவகையில் இவ்வாய்வானது இலங்கையில் இஸ்லாமிய ஷரீஆவின் அமுலாக்கத்திற்கான சூழலமைவையும் பரப்பையும் பரிசீலித்தலை நோக்காகக் கொண்டுள்ளது. பண்பு ரீதியான இவ்வாய்வானது நேர்காணல் மூலம் பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டது. இலங்கையின் இஸ்லாமிய கல்வியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் அதிகாரிகள் போன்ற அலுவலகத் 50 முக்கியஸ்தர்களிடமிருந்து நேர்காணல்கள் பெறப்பட்டு குறிகோள் முறையில் (Coding Method) பகுப்பாய்வு செய்யப்பட்டன. இலங்கையின் யாப்பானது அனைத்து சமூகத்தவர்களுக்கும் தத்தமது மதங்களை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமையளிக்கின்றது. இந்த வகையில் முஸ்லிம்கள் ஷரீஆவிற்குட்பட்டு தமது வாழ்வியலை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். குறிப்பாக, முஸ்லிம் தனியார் சட்டம் தனிப்பட்ட வாழ்வின் இஸ்லாமிய ஷரீஅத்தின் அமுலாக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும். இருந்தபோதிலும் அவர்களது முழு வாழ்விலும் இஸ்லாமிய ஷரீஆவை அமுலாக்கம் செய்வதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளோ, சட்டக் கோவைகளோ இலங்கையில் இல்லை. இந்நிலையில் பெரும்பான்மை வாதம், பௌத்த வாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் பிரிவுகள் இஸ்லாமியப் பெண்களின் ஆடை, ஹலால், உழ்ஹிய்யா, அதான், மத்ரஸா, காழி நீதிமன்றம் போன்றவற்றை அமுலாக்கம் செய்வதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளமை இலங்கையின் இஸ்லாமிய ஷரீஆவின் அமுலாக்கத்திற்கான சூழலை ஐயத்திற்குட்படுத்தியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் சிறுபான்மைச் சூழலமைவு சிறுபான்மைச் சட்ட மரபொன்றை வேண்டி நிற்கின்றது என்பது இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாகும். மேலும் இவ்வாய்வு இஸ்லாமிய ஷரீஆ மற்றும் அதன் அமுலாக்கம் தொடர்பான தரவுகளை வழங்கவல்லது.