Abstract:
பொருளாதார ரீதியில் பல முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்றைய மனித சமுதாயத்தில் வறுமை ஓர் தவிர்க்க முடியாத அம்சமாகவே காணப்படுகின்றது. இத்தகைய சிக்கல் வாய்ந்த நிலையினை சீர்செய்ய இஸ்லாம் தனித்துவமான கோட்பாட்டினை வழங்கி மக்களை வழிகாட்டுகின்றது. அந்தவகையில், ஓர் உன்னதமான நிவாரணியாக காணப்படுகின்ற ஸகாத்தினை தனியாக அல்லாமல் கூட்டாக நிறைவேற்றுவதனால் பாரிய பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து கொள்ளவும் வகைசெய்கின்றது. இச்செயன்முறையை நடைமுறைப்படுத்த பல இஸ்லாமிய நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. அந்தவகையில், இவ்வாய்வு காத்தான்குடிப் பிரதேச முஸ்லிம்களின் வறுமை நிலையைக் குறைப்பதில் பைதுஸ் ஸகாத் நிறுவனத்தின் பங்களிப்பினை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பண்பு ரீதியான ஆய்வு முறையியலை கொண்டிருப்பதுடன் முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளை உள்ளடக்கியுள்ளது. இதற்காகவென பைதுஸ் ஸகாத் நிதியப் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களும் பைதுஸ் ஸகாத் நிதியப் பதிவேடுகள், ஆண்டறிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளில் 2017 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையுள்ளவை பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பைதுஸ் ஸகாத் நிதியமானது அதன் மூலோபாயத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வறுமை ஒழிப்பில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அத்துடன் மக்களிடம் ஸகாத் பற்றிய போதிய புரிதலின்மை, ஸகாத் வழங்குவோர் நிஸாப் பற்றிய தெளிவின்மையால் குறைந்த தொகையை வழங்குகின்றமை, "ஸகாத் ஒரு கூட்டுக்கடமை" என்ற முக்கியத்துவத்தைப் பற்றிய அறிவின்மையினால் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்களுக்கு மாத்திரம் ஸகாத் வழங்கி சுருக்கிக் கொண்டமை, ஸகாத் நிறுவனத்தைப் பற்றிய விமர்சனங்கள் போன்ற பல சவால்களை ஸகாத் நிதியம் எதிர்நோக்கி வருகிறது என்பதை இனங்காணக் கூடியதாக இருந்தது. எனவே, இவ்வாய்விலிருந்து காத்தான்குடி பைதுஸ் ஸகாத் நிதியமானது வறுமை ஒழிப்பில் எவ்வாறு பங்காற்றுகின்றது என்பதனையும் அது தொடர்பான விழிப்புணர்வினையும் வழிகாட்டல்களையும் வழங்கும் விதமாக இவ்வாய்வு முக்கியம் பெறுகின்றது.