Abstract:
ஒரு குழந்தையை உலகிற்கு கொண்டு வந்து அக்குழந்தைக்கான சகல வழிகாட்டல்களையும் கற்றுக் கொடுத்து வளர்ப்பதில் பெண்களுக்கு தனியான இடம் உண்டு. அவ்வாறான பெண்கள் பணிபுரிய செல்லும் போது குழந்தை வளர்ப்பு-தொழில் இரண்டையும் சமநிலைப்படுத்துவதன் மூலமே தனது குடும்ப வாழ்வை ஒழுங்காக அமைத்துக் கொண்டு செல்ல முடியும். அந்த வகையில் பொலன்னறுவை மாவட்டத்தின் தமன்கடுவை பிரதேசத்தில் வாழும் பணிபுரியும் முஸ்லிம் பெண்கள் குழந்தை வளர்ப்பில் எதிர் நோக்கும் சவால்களை கண்டறிந்து தொழில்-குழந்தை வளர்ப்பு இரண்டையும் சமநிலைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் பரிந்துரைகளை முன் வைப்பதை நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்புசார் முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வாய்வானது முதலாம் நிலை தரவுகள் மற்றும் இரண்டாம் நிலை தரவுகளை மையப்படுத்தி அமைந்துள்ளது. முதலாம் நிலை தரவான நேர்காணல் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் நிலை தரவுகளான பிரதேச செயலக அறிக்கைகள், ஆய்வு கட்டுரைகள், நூல்கள், சஞ்சிகைகள், பிரசுரிக்கப்பட்ட, பிரசுரிக்கப்படாத ஆய்வுகள், இணையதள ஆக்கங்கள் மற்றும் புள்ளிவிபர ஆவணங்கள் போன்றவற்றிலிருந்தும் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் உட்பொருள் பகுப்பாய்வு (Content Analysis) முறை மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி தரவு முடிவுகள் விபரண ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளன. குடும்பம் மற்றும் பிள்ளைகளுக்கான கடமை, பொறுப்புக்களை சரிவர நிறைவேற்ற முடியாமை, அதிக வேளைப்பளு, ஓய்வின்மையினால் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாதல், தொழில் புரிவதால் சமூக அந்தஸ்து கிடைப்பதாகவும் பொருளாதார சவால்களை எதிர்நோக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இச் சவால்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.