Abstract:
நவீன சூழலில் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார, சமய தளங்களில் மாற்றங்கள் துரிதமாக இடம் பெற்று வருகின்றன. இதற்கமைவாக சமூகத்திலும் பொது வாழ்விலும் தொழிலகத்திலும் ஆண் பெண் ஆகிய இருபாலாரினதும் பங்காற்றுதல் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது. இப்பின்னணி, பெண்கள் பாரம்பரிய ரீதியான பங்காற்றுதலை மிகைத்தியுள்ளது. இஸ்லாமிய நோக்கில் பெண்ணும் தத்தமக்கேயுரிய பணிப்பகிர்வை கொண்டவர்கள். குடும்ப கட்டமைப்பில் பெண்ணின் பாத்திரம் மேம்பட்டதொன்று. ஆயினும் இன்று பெண்கள் பல்வேறு வகையான தொழில் புரிதலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் அவர்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கின்றனர். இஸ்லாத்தை வாழ்வியலாகக் கொண்ட தொழில் புரியும் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆய்விற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் இவ்வாய்வு உடத்தலவின்னை பிரதேசத்தில் தொழில் புரியும் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களை இனங்கண்டு இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவை பற்றி பரிசீலனைக்கு உட்படுத்துகின்றது. கட்டமைக்கப்பட்ட நேர்காணல் வினாக்கள் மூலம் நோக்கு மாதிரியில் தெரிவு செய்யப்பட்ட 50 பெண்களிடம் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வு இலக்கிய மீளாய்வின் மூலம் கோட்பாட்டு அமைப்புத் திட்டத்தை நிறுவியுள்ளது. இவ்வாய்வின் கண்டறிதல்கள் எனும் வகையில் உடத்தலவின்னை பிரதேசத்தில் தொழில் புரியும் முஸ்லிம் பெண்கள் தொழில் சூழல், தொழில் வகை மற்றும் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கின்றனர். இஸ்லாமிய ஆடை, இஸ்லாமிய ஒழுக்க நியமங்கள், அன்றாட இஸ்லாமிய கடமைகளை நிறைவு செய்தல் போன்றன சார்ந்த சவால்கள் பிரதானமாக குறிப்பிடத்தக்கது. தொழில் சுமையின் காரணமாக தொழில் மற்றும் குடும்ப சமநிலையை பேணுவதில் எதிர்நோக்கும் சவால்கள் இந்த நிர்பந்த சூழலில் அவர்கள் உள்ளாகும் இழப்புகள் என்பன இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விமர்சனத்திற்குட்பட்டது. பெண்கள் பற்றிய இஸ்லாமிய வரையறைகளை பெறுமானங்களை தழுவியதாக கொள்கை வகுப்போருக்கும் செயற்பாட்டாலர்களுக்கும் இவ்வாய்வு ஓர் உசாத்துணையாக அமையவல்லது.