Abstract:
சட்டரீதியான திருமணத்தின் மூலம் உருவாகும் குடும்ப அலகு மனித சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கும் நிம்மதியான வாழ்வுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. அதன் தலைமைத்துவம் பொதுவாக ஆணிடம் இருந்த போதிலும் தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் பெண் அப்பொறுப்பைச் சுமக்க வேண்டியவளாகின்றாள். அத்தகைய குடும்பங்கள் பெண்தலைமைக் குடும்பங்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றன. அநுராதபுர மாவட்டத்தின் நேகம பிரதேசத்தில் வாழும் பெண்தலைமைக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றுக்குத் தகுந்த தீர்வுகளை பரிந்துரை செய்யும் நோக்கோடு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்புசார் மற்றும் அளவுசார் முறைமைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வு முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தியுள்ளது. முதலாம் நிலைத் தரவுகள் வினாக்கொத்து மற்றும் நேர்காணல் மூலம் பெறப்பட்டுள்ளதோடு இரண்டாம் நிலைத் தரவுகள் ஆய்வுக் கட்டுரைகள், இணையத்தள ஆக்கங்கள், நூல்கள், சஞ்சிகைகள், புள்ளிவிபர ஆவணங்கள், அறிக்கைகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன. மேலும் வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட தரவுகள் Microsoft Excel மென்பொருளினை பயன்படுத்தியும் நேர்காணல்முறை மூலம் பெறப்பட்ட தரவுகள் குறியீட்டு முறையிலும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் அவ்வாறு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட தரவு முடிவுகள் விபரண ரீதியாக முன்வைக்கப்படவுள்ளன. திருமணமாகாமை, விவாகரத்து, கணவரின் மரணம், தனித்து வாழுதல், கணவரின் சுகவீனம் போன்ற காரணிகளால் பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் நேகம பிரதேசத்தில் உருவாகியுள்ளன என்பதும் அக்குடும்பங்கள் உணவு, உடை, கல்வி, பாதுகாப்பு, வாழ்வாதாரம், சுகாதாரம் போன்ற விடயங்களில் பல பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றன என்பதும் இவ்வாய்வின் கண்டறிதல்களாகும். இவ்வாறாக உருவாகும் பெண்தலைமைத்துவ குடும்பங்களின் துயரினைத் துடைப்பதற்குப் பல்வேறு வகையான செயற்திட்டங்கள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் பிரதேச மற்றும் தேசிய மட்டங்களிலும் இடம்பெற வேண்டும் என்பது ஆய்வின் பரிந்துரையாகும். இந்த ஆய்வு பெண் தலைமைக் குடும்பங்கள் பற்றி ஆய்வில் ஈடுபடுவோருக்கு சில அடிப்படைத் தகவல்களை வழங்கக் கூடியது.