| dc.description.abstract |
உலக வரலாறு நெடுகிலும் ஆண் பெண் ஆகியோரின் பல்துறைசார் உரிமைகள் (அரசியல், சமூக, கலாச்சார) பேசுபொருள்களாக இருக்கின்றன. பெண்களுக்கான உரிமைகள் சுதந்திரங்கள் தொடர்பாக உலக நாடுகளில் பல்வேறு சட்ட ஏற்பாடுகள் காணப்பட்ட பொழுதிலும் அவையாவும் எழுத்தளவிலான ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. அவை நடைமுறை சாத்தியமானவையா என்பது கேள்விக்குரிய விடயமாகும். பெண்களுக்கென்று வழங்கப்படும் பல்வேறு உரிமைகளில் பொருளீட்டல் உரிமைகளும் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. அந்த வகையில் இஸ்லாம் சமத்துவத்தையும், நடுநிலையான சமநிலையையும் மனித வாழ்வின் எல்லா இடங்களிலும் கொண்ட மார்க்கம் என்ற அடிப்படையில் ஆண், பெண் இருபாலாருக்கும் அவர்கள் படைக்கப்பட்ட அமைப்பிற்கும், அவர்களுக்கென காணப்படும் பொதுப் பண்புகளுக்கு இனங்கவும் சமத்துவத்தின் அடிப்படையில் உரிமைகளை வழங்கியுள்ளது. மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்குமான வழிகாட்டல்களை வழங்கும் இஸ்லாத்தில் பெண்களின் பொருளீட்டல் உரிமைகள் தொடர்பான அதன் கரிசனையும் வலுவானதாகும். இவ்வாய்வு தெஹிஅங்க பிரதேசத்தில் பொருளீட்டலில் ஈடுபடும் முஸ்லிம் பெண்கள் தங்களது வருமானத்தை சுயமாகப் பிரயோகிப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணல், இனங்காணப்படும் பிரச்சினைகளை இழிவளவாக்குவதற்கான பரிந்துரைகளையும் தீர்வுகளையும் முன்வைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்பு சார் மற்றும் அளவு சார் முறையில் அமைந்துள்ள களப்பு (Mixed Method) ரீதியான இவ்வாய்வில் முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாம் நிலைத் தரவுகளாக இலங்கைக் குடிசன தொகை புள்ளி விபரத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கு இணங்க தெஹிஅங்க பிரதேசத்தில் 219 பெண்கள் பொருளீட்டலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் தெரிவு செய்யப்பட்ட 150 பெண்களிடம் வினாக்கொத்து வழங்கப்பட்டுள்ளதுடன், நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நபர்களிடம் அரைக்கட்டமைக்கப்பட்ட நேர்காணல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வினாக்கொத்துகள் மூலம் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்காக (MS Excel 365) பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், நேர்காணல் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள் குறியீட்டு முறை (Coding) மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் கோட்பாட்டு கட்டமைப்பினை ஆக்கப்பூர்வமாக வடிவமைப்பதற்காக புத்தகங்கள், சஞ்சிகைகள், ஆய்வு கட்டுரைகள், இணைய ஆக்கங்கள் போன்ற இரண்டாம் நிலை தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் பொருளீட்டும் முஸ்லிம் பெண்கள் தங்களது வருமானத்தை சுயமாகப் பிரயோகிப்பது பற்றிய கண்ணோட்டம் கோட்பாட்டு அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம் இப்பிரதேசத்தில் பொருளீட்டும் முஸ்லிம் பெண்கள் தங்களது வருமானத்தை சுயமாக பிரயோகிப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக கணவனின் அழுத்தம், பிள்ளைகளின் அழுத்தம், சகோதரர்களின் அழுத்தம், வீட்டு தலைவரின் அழுத்தம், குடும்பத்தில் ஏனையவர்களின் தலையீடுகள், மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகுதல் போன்றன கண்டறியப்பட்டுள்ளதுடன், முடிவில் பிரச்சினைகளை இழிவளவாக்குவதற்கான விதந்துரைகளும், எதிர்கால ஆய்வாளருக்கான ஆலோசனைகளும் இவ்வாய்வின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. |
en_US |