Abstract:
வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகத்தின் பல்துறைசார் தேவைகளை நிவர்த்தி செய்யும் மத்திய நிலையமாக மஸ்ஜித்கள் தொழிற்பட்டு வந்துள்ளன. அந்தவகையில் திருகோணமலை மாவட்ட தோப்பூர் பிரதேசத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வு 2013 தொடக்கம் 2023 வரை சமூக மாற்றத்தில் மஸ்ஜித்களின் வகிபங்கைப் பரிசீலித்து அதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை இனங்காண்பதை நோக்காகக் கொண்டுள்ளது. பண்புசார் ஆய்வு முறையில் நோக்க மாதிரியை அடிப்படையாகக் கொண்டு குறித்த பிரதேசத்தில் உள்ள 7 ஜும்ஆ மஸ்ஜித்களில் ஒவ்வொரு மஸ்ஜிதினதும் தலைவர், செயலாளர் உட்பட 12 பேர் தெரிவு செய்யப்பட்டு மொத்தமாக 84 பேருடன் இடம்பெற்ற அரைகட்டமைக்கப்பட்ட நேர்காணல் ஊடாக இவ்வாய்வுக்கான முதலாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டன. அத்துடன் இவ்வாய்வின் கோட்பாட்டு அமைப்புத் திட்டத்தை வரைய புள்ளிவிபரங்கள், ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள், இணையத்தள ஆக்கங்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. முதலாம் நிலைத் தரவுகள் குறியீட்டு முறையிலும் இரண்டாம் நிலைத் தரவுகள் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையிலும் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டன. குறித்த மஸ்ஜித்கள் தோப்பூர் வாழ் முஸ்லிம்களின் பல்துறைசார் முன்னேற்றத்தில் காத்திரமான பங்களிப்புக்களை ஆற்றிய போதும் போதிய பொருளாதார வசதியின்மை, இட மற்றும் வளப்பற்றாக்குறை, மக்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காமை மற்றும் மஸ்ஜித்களின் நிர்வாக அங்கத்தவர்கள் இவ்விடயம் தொடர்பில் தேவையான விளிப்புணர்வைப் பெற்றிருக்காமை போன்ற காரணிகள் அம்மஸ்ஜித்களின் வினைத்திறன் மிக்க சமூகப் பங்களிப்பில் குறிப்பிடத்தக்களவு எதிர்மறையான தாக்கங்களை செலுத்துகின்றன என்பதே இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாகும். அந்தவகையில் சமூக மாற்றத்தில் சமூக-பொருளாதார நிறுவனங்களின் வகிபங்கு தொடர்பான எதிர்கால ஆய்வுகளுக்கு இவ்வாய்வை வாசிப்பாகக் கொள்ள முடியும்.