Abstract:
விமானப் போக்குவரத்தின் துரிதவளர்ச்சி காரணமாகப் பரவிய கொவிட்-19 நோய்த்தொற்றானது இன, மத, பால், வயது, பொருளாதாரநிலை, கல்விநிலை என்ற வேறுபாடுகள் பாராது உலகில் அனைத்து நிலையிலுள்ள மக்களுக்கும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலகில் பலதரப்பட்ட மக்களையும் ஏதோவொரு வகையில் தாக்கத்திற்குள்ளாக்கிய இந்நோய் சமூகத்தில் மிக முக்கியமான பாத்திரமாக விளங்கும் திருமணமான பெண்களின் நிலைமைகளிலும் சாதகமான மற்றும் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு கொவிட்-19 இன் தாக்கங்களும் திருமணமான பெண்களின் வாழ்க்கைப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களும் எனும் தலைப்பில் மருதமுனைப் பிரதேசத்தை மையப்படுத்திய இவ் ஆய்வானது மருதமுனையில் திருமணமான பெண்கள் கொவிட்-19 நோய்தொற்றுக் காலத்தில் எத்தகைய சாதகமான, பாதகமான தாக்கங்களை எதிர்கொண்டார்கள்? அத்தாக்கங்களின் விளைவுகள் எவ்வாறு காணப்பட்டன? என்பவை தொடர்பான உண்மைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் இவ்ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது திருமணமான மட்டுமின்றி கொவிட்- 19 மற்றும் அதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் அன்றாட வாழ்வில் முழுக்குடும்பத்தினதும் நிம்மதியான நிலைக்கும் உதவக் கூடியவாறு அமையவுள்ளதால் இவ்ஆய்வு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வானது பண்பு ரீதியான (qualitative) பின்னோக்கிய (retrospective) ஆய்வாகும். இவ்ஆய்விற்காக முதலாம்நிலை மற்றும் இரண்டாம்நிலைத் தரவுசேகரிப்பு முறைகளைப் பயன்படுத்தித் தகவல்கள் பெறப்பட்டன. முதலாம் நிலைத் தரவுகளாக நேரடி மற்றும் மறைமுக அவதானங்களும் நேர்காணல்களும் அமையப் பெற்றன. எளிய எழுமாற்று முறை மூலம் தெரிவு செய்யப்பட்டு அரைக்கட்டமைக்கப்பட்ட நேர்காணல்கள் மூலமும் அவதானிப்புகள் மூலமும் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மருதமுனைவாழ் குடும்பப் பெண்கள் கொவிட்-19 இற்குப் பின்னர் எதிர்கொண்ட தாக்கங்களைக் கண்டறிவதற்காக மருதமுனையின் 8 கிராமசேவைப் பிரிவுகளில் இருந்தும் எளிய எழுமாற்று முறை மூலம் 30 பெண்கள் தெரிவு செய்யப்பட்டும், இது தொடர்பான ஆழமான தகவல்களைப் பெற்றுக் கொள்ள ஊரிலுள்ள அறிவு ஜீவிகள் ஏழு பேரிடமும் அரைக்கட்டமைக்கப்பட்ட நேர்காணல் மற்றும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாம்நிலைத் தரவுகள் கல்முனை மாநகர சபையில் பெறப்பட்ட அறிக்கை, கொவிட்-19 தொடர்பில் பெறப்பட்ட ஆய்வுகட்டுரைகள், நூல்கள், இணையத்தள ஆக்கங்கள் என்பவற்றின் மூலமும் அறிக்கைகள், பெறப்பட்ட இலக்கிய மீளாய்வுகளின் மூலம் கோட்பாட்டு அமைப்புத் திட்டம் நிறுவப்பட்டு 5 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மருதமுனைவாழ் திருமணமான பெண்கள் கொவிட்-19க்குப் பின்னர் பல சாதகமான மற்றும் பாதகமான தாக்கங்களை எதிர்கொண்டுள்ளமையும் அப்பாதகமான தாக்கங்களின் காரணமாக பிரதானமான பாதக விளைவான மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளமையும் அம்மனஅழுத்தமானது பல விடயங்களால் முகாமை செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. மருதமுனையில் கொவிட்-19 இன் தொற்றுப் பரவல் மிகக் குறைவாகவே ஏற்பட்டுள்ளது. இது தனி முஸ்லிம் குடித்தொகையைக் கொண்ட ஒரு பிரதேசம் என்பதனாலும் இக்காலத்தில் மனஅழுத்த மேலாண்மைக்கான ஒரு ஊடகமாக இஸ்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகள், இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் என்பனவும் மக்களின் உதவிகள், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமூக நலன்புரித் திட்டங்கள் என்பனவும் பங்களிப்புச் செய்துள்ளன. இவற்றின் காரணமாக, எதிர்மறையான மனஅழுத்தம் உக்கிரமடையாமல் நன்கு குறைக்கப்பட்டு முகாமை செய்யப்பட்டுள்ளது. நேர்மறையான தாக்கங்கள் மற்றும் விளைவுகள் ஏற்பட்டுள்ளமையானது விஷேடமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.