Abstract:
பெண்தலைமைக் குடும்பங்களின் பிரச்சினை ஆய்வாளர்களின் கரிசனையைப் பெற்ற ஒரு விடயமாகும். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் பொருளாதார தேவை முதன்மையானதாகும். பல்வேறு காரணங்களினால் இலங்கையிலும் இத்தகைய பெண்தலைமைக் குடும்பங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாய்வு அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் பெண்தலைமைக் குடும்பங்களின் தேவையை இனங்கண்டு அதனை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை பரிசீலிப்பதை பிரதானமான நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிக்கோள் மாதிரி முறையில் 189 குடும்பத் தலைமை கொண்ட பெண்களிடமிருந்து பெறப்பட்ட கலப்பு வினாக்கொத்து, 12 பேருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மற்றும் அவதானிப்பின் ஊடாக பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்விற்குட்படுத்தும் இவ்வாய்வு, இலக்கிய மீளாய்வின் மூலம் ஆய்வுக்கான கோட்பாட்டு அமைப்பு திட்டத்தை நிறுவியுள்ளது. பெண்தலைமைக் குடும்பங்களில் பொருளாதார தேவைகளில் உணவுத்தேவையே பிரதான தேவையாக கருதப்படுவதனால் அக்கரைப்பற்றில் இயங்குகின்ற நிறுவனங்களின் ஏற்பாடுகளும் இக்குடும்பங்களின் தேவைக்கு எற்ற வகையில் அமையப்பெற்றுள்ளது. இக்குடும்பங்களில் தேவைகள் அதிகரித்த நிலையில் வருமான அளவு குறைவாக காணப்படுவதனால் அதிகமான பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களின் ஈடுபடுகின்றனர். கல்வி மட்டத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் இப்பெண்கள் அதிகம் சுயதொழிலை மேற்கொள்கின்றனர், மேலும் ஆய்வின் உட்படுத்தப்பட்ட பிரதேசத்தின் தேவைகளை பெற்றுக் கொடுப்பதில் முறைசார் மற்றும் முறைசாரா நிறுவனங்கள் பங்களிக்கின்றன. அவற்றுள் இஸ்லாமிய நிறுவனங்களில் ஸகாத் நிதியம் (Zakat fund) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவர்களுடைய ஏற்பாடுகள் பகுதி ரீதியானவை. இதனால் இப்பெண்களின் பொருளாதாரம் மிக நெருக்கடி மிக்கதாகவே காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பெண்தலைமைக் குடும்பங்கள் தொடர்பான செயல்திட்டங்களை வகைப்படுத்தி, முன்னெடுப்பதற்கு போதிய தரவுகளை தரவல்லது.