Abstract:
அறிவைத் தேடிப் பெற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். கற்றுக்கொள்வதின் ஊடாகவே மனிதன் தன் வாழ்வின் முன்னேற்றத்தை அடைய முடியும். எனினும் ஒப்பீட்டளவில் கம்பளைப்பிரதேச முஸ்லிம் பெண் மாணவிகளை விட முஸ்லிம் ஆண் மாணவர்களின் கல்விநிலை பின் தங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனை ஓர் ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்பளைப் பிரதேச முஸ்லிம் ஆண் மாணவர்களின் கல்விநிலையைக் கண்டறிதல், மற்றும் கம்பளைப் பிரதேச ஆண் மாணவர்கள் கல்வியில் பின்னடைந்துள்ளமைக்கான காரணிகளை இனங்காணுதல் ஆகியவற்றை ஆய்வின் நோக்கங்களாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கான தகவல்கள் அளவு மற்றும் பண்புசார் தரவுகளை அடிப்படையாக வைத்து முதலாம் நிலை மற்றும் இரண்டாம்நிலைத் தரவுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டுள்ளன. கம்பளைப் பிரதேசத்தில் காணப்படும் 04 தேசிய பாடசாலைகளில் 2010-2020 வரையான க.பொ.த. சாதாரண தர மற்றும் க.பொ.த. உயர் தர மாணவர்களின் பெறுபேறுகள் MS Excel 360 மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆண் மாணவர்களின் கல்விநிலை கண்டறியப்பட்டுள்ளது. நோக்கமாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 4 பாடசாலைகளில் அதிபர்களுடனும், ஒரு பாடசாலைக்கு ஐவர் என்ற அடிப்படையில் 20 மாணவர்களுடனும் மற்றும் ஒரு பாடசாலைக்கு நால்வர் என்ற அடிப்படையில் 16 ஆசிரியர்களுடனும் அரை கட்டமைக்கப்பட்ட நேர்காணல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தள ஆக்கங்கள் போன்றன மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வானது கம்பளைப் பிரதேச ஆண் மாணவர்களின் கல்வி நிலை பின்னடைவுக்கான காரணிகளையும் அதிலிருந்து அவர்களை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் முன்வைத்துள்ளதனால் அப்பிரதேச ஆண் மாணவர்களின் கல்விநிலையை வளர்ச்சியடையச் செய்வதற்கான முறையான எதிர்காலத் திட்டமிடலுக்கு உறுதுணையாக அமையும் எனலாம்.