| dc.description.abstract |
அல்லாஹ்வின் படைப்புக்களில் கண்ணியமிக்க படைப்பாகவும், இவ்வுலகின் மிகச் சிறந்த வளமாகவும் காணப்படும் மனிதன் சிறந்த உடல், உள ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பல்வேறு வகையில் உணர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் மனிதனது அகக்காரணிகளில் மட்டுமல்லாது புறக்காரணிகளிலும் தாக்கம் செலுத்தும் உளவியல் ஆரோக்கியத்தை பேணும் வகையிலேயே உளவியல் துறை காணப்படுகிறது. இன்று மனித சமூகமானது பல்வேறு உளவியல்சார் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது. அதிலும் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது கல்வி வாழ்வில் பல்வேறுபட்ட உளவியல்சார் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதனை பல்வேறு ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இவ்வடிப்படையில் சமூகத்தின், நாட்டின் எதிர்கால தலைவர்கள் என்ற வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல்சார் பிரச்சினைகளை ஆய்வு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வானது அளவுசார் முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவ்வாய்விற்காக முதலாம் நிலைத்தரவுகளாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட மாணவர்கள் 413 பேரில் குடித்தொகை மாதிரி அமைப்பில் எழுமாறாகத் (Random) தெரிவு செய்யப்பட்ட 200 பேரை மையமாக வைத்து அவர்களிடம் மூடிய அமைப்பிலான வினாக்கள் அடங்கிய வினாக்கொத்து வழங்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டுள்ளதோடு அவை Microsoft Excel Spreadsheet (version 2013) மூலம் பகுப்பாய்வு செய்யப்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆய்வின் கோட்பாட்டு அமைப்பைப் பெற இரண்டாம் நிலைத் தரவுகளாக ஆய்வுக் கட்டுரைகள், இதழியல்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தள தகவல்கள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளும் மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாக மாணவர்கள் மனஅழுத்தம், பதகளிப்பு, பயம், கோபம், மனச்சோர்வு முதலான உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்வது அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வுளவியல் பிரச்சினைகளை கையாள்வதில் அல்குர்ஆன்-ஸுன்னாவுடன் தொடர்பை ஏற்படுத்தல், உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபடல், பயனுள்ள பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடல், துறைசார்ந்த அறிஞர்களை சந்தித்தல், திக்ர மற்றும் அவ்ராதுகளில் ஈடுபடல், நெருங்கியவர்களுடன் பெற்றோர், நண்பர்களுடன் உரையாடல், ஆன்மீக மேம்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்துதல் மற்றும் நேரமுகாமைத்துவத்துடன் செயற்படல் முதலான விடயங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதனை அறிய முடிகிறது. இவற்றை மேலும் மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பதற்காக பீடத்தில் இஸ்லாமிய உளவியல் பாடத்தை அறிமுகம் செய்தல், உளவியல்சார் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், பீடத்தில் உளவளத்துணைக்கான பிரிவொன்றை ஸ்தாபித்தல், பல்கலைக்கழக மட்டத்தில் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்களும் பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |