Abstract:
சிங்கள முஸ்லிம் உறவும் அது முஸ்லிம் கலாசாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும்: தாதுசேனபுரத்தை மையமாகக் கொண்ட ஆய்வு எனும் ஆய்வானது தாதுசேனபுர பிரதேசத்தில் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மிக நெருக்கமான அன்னியோன்யமான உறவு ஏற்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய உறவானது இந்த மக்கள் மத்தியில் எவ்வாறு உருவாகின்றது என்பது தொடர்பாகவும் இந்த உறவினால் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வாறான தாக்கங்கள் ஏற்படுத்துகின்றன என்ற விடயங்கள் பற்றியும் ஆய்வு செய்வதே இந்த ஆய்வினுடைய நோக்கமாக காணப்படுகின்றன. இந்த ஆய்வானது பண்புசார் ஆய்வாக காணப்படுவதன் காரணமாக இதற்கென முதலாம் நிலை தரவுகளாக குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் காணப்படுகின்ற மக்களிடம் இருந்து வினாக்கொத்து முறை மூலம் நேரடியாக தகவல்கள் பெறப்பட்டன. இது மாத்திரமன்றி பிரதேசத்தில் காணப்படுகின்ற இப்பிரதேசத்துடன் தொடர்புடைய பிரமுகர்கள் அரச உத்தியோகத்தர்கள் ஆகியோரிடமும் நேரடியாக பேட்டி முறை மூலம் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் இன்னும் சிலரிடம் இருந்து தொலைபேசி உரையாடல் மூலமும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாம் நிலை தரவுகளாக பிரதேச செயலக தகவல்களும் மேலும் பிற நூல்களிலிருந்து தகவல்கள் பெறப்பட்டு இந்த ஆய்வானது நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் பெறுபேறுகளின்படி மக்கள் தங்களிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இன முறுகல்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் பல இன மக்கள் மத்தியில் பாடசாலை நட்புறவானது அவர்களிடையே இன சௌஜன்யத்தை உருவாக்குகின்றது எனவும் அறிந்து கொள்ள முடிகின்றது. இருந்தபோதிலும் இத்தகைய சிங்கள முஸ்லிம் உறவானது பல்லின உறவுகளின் நெருக்கமானது மக்களிடையே சமயத்தை மறந்து கலப்பு சமய திருமணம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளதையும் இஸ்லாமிய சமயத்தினுடைய இறை நம்பிக்கை மற்றும் இறை வணக்கங்கள் என்பனவற்றில் பெளத்த சமய தாக்கங்களை உருவாக்கியுள்ளதையும் அறிய முடிந்தது. இந்த ஆய்வானது எதிர்காலத்தில் பிற சமூகத்தினுடைய நல்லிணக்கத்திற்கு மிக முக்கியமானதாகவும் அடிப்படையானதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.