Abstract:
சர்வதேச உறவு என்பதன் புரிதல் மிக ஆழமானதாகும். பொதுவாக உலகிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றும் ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள அரசியல், பொருளாதார, இராஜதந்திர உறவு மற்றும் வெளிவிவகாரக் கொள்கை போன்றன இவ்வுறவைச் சுட்டி நிற்கின்றன. மத்திய காலத்தில் உலகளாவிய ரீதியில் இவ்வுறவு கேள்விக் குறியாக்கப்பட்டதுடன், இந்நிலை இன்றும் பல நாடுகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், இஸ்லாத்தில் வெளிவிவகார அம்சங்களைக் கொண்டு நடாத்துவன எனக் கருதப்படும் இறுக்கமான சட்டரீதியிலான பண்டைய அம்சங்களை கொள்கை உருவாக்கம் செய்வோர் தற்கால பிரச்சினைகளின் உண்மையான தன்மையினை உணர்ந்த கொள்ளாது இருப்பதுடன் சர்வதேச உறவுகள் குறித்து மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டக்கோவைகள் இறுக்கமாக இருப்பதுடன் அவை காலத்தால் பிந்தியதாக இருப்பினும் அவ்வாறான கொள்கைகள் இன்றைய சூழலிலும் பின்பற்றப்படுவதானது சர்வதேச உறவை கட்டியெழுப்புவதில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. இவ்வாய்வானது இஸ்லாத்தில் சர்வதேச உறவும் இலங்கைச் சூழலில் அதன் பொருத்தப்பாடும் எனும் தலைப்பில் அமையப் பெற்றுள்ளது. இது சர்வதேச உறவு பற்றிய இஸ்லாமியக் கருத்துக்களை அலசி ஆராய்தல், இஸ்லாமிய சர்வதேச உறவின் அடிப்படைக் கூறுகளில் இலங்கைச் சூழலில் நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமானவற்றை அடையாளங்காணல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. பன்புசார் தன்மையை கொண்ட இவ்வாய்வின் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக வினாக்கொத்து (Google form) மற்றும் அவதானம் ஆகியவற்றை முதலாம் நிலைத்தரவுகளாகவும் முன்னைய இலக்கியங்கள் இரண்டாம் நிலைத்தரவுகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுப் பிரதேசமான அகில இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களில் 308 பேரிடம் அளவையியல் வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளன. அளவு ரீதியான தரவுகள் Microsoft EXCEE மென்பொருள் மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டது. மேலும் இரண்டாம் நிலைத்தரவுகளை பயன்படுத்தி ஆய்வுக்கான கோட்பாடு அமைப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டது. இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாக அகில இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாம் வழிகாட்டுகின்ற முறையில் முஸ்லிம்- முஸ்லிமல்லாதோர் உறவைப் பேணி வருகின்றனர். எனினும் கூட்டு வியாபாரம், கடன் பெறுதல், மரணச்சடங்குகளில் கலந்துகொள்ளல், விழாக்களில் கலந்து கொள்ளல் மற்றும் முஸ்லிமல்லாதவர்களின் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்களில் இஸ்லாம் காட்டியுள்ள வழிகாட்டல்களுக்கு ஏற்ப திருப்திகரமான நிலையில் நடைமுறையில் இல்லை என்பன கண்டறியப்பட்டுள்ளன.