Abstract:
இன்றைய முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் ஒன்று தான் யாசகம். எம் நாட்டில் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் போன்ற நான்கு இனத்தவர்கள் காணப்படுகின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்திலேயே அதிகளவான யாசகர்கள் காணப்படுகின்றனர். யாசகத்தை தடுத்தும் ஊழியத்தை ஊக்குவிப்பதிலும் பல்வேறு வகையான அல்குர்ஆன் ஹதீஸ்கள் வந்துள்ள போதிலும் அது பற்றிய அறியாமை மற்றும் பயமின்மை போன்ற காரணங்களினால் யாசகம் குறைந்த நிலையை காணவில்லை. அதனால் ஏற்படுகின்ற தாக்கங்களும்’ மருதமுனை பிரதேசத்தினை மையப்படுத்திய இவ்வாய்வானது யாசகத்தினால் ஏற்படும் வணக்க வழிபாடுகளிற்கான தடைகள், சிறுவர்கள், இளம் பெண்கள் யாசகம் கேட்பதானால் ஏற்படும் விளைவுகள், பொய்யான யாசகத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழிவுகள் போன்றனவற்றை ஆராய்வதே ஆய்வுப் பிரச்சினையாக உள்ளது. மேலும் இவ்வாய்வின் நோக்கங்களாகமுஸ்லிம் சமூகத்தில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கை எவ்வாறுள்ளது என்பதை அடையாளம் காணுவதும் இவ்யாசகத்தினால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளை நோக்குவதுமாக உள்ளது. இவ்வாய்விற்காக முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு முறைகளை பயன்படுத்தி தகவல்கள் பெறப்பட்டன. முதலாம் நிலைத்தரவுகளாக நேரடி மற்றும் மறைமுக அவதானங்களும் நேர்காணல்களும் காணப்படுகின்றன. எளிய எழுமாற்று முறை மூலமும் 29 பேர் தெரிவு செய்யப்பட்டு 20 வினாக்களை கொண்ட நேர்காணல் இடம் பெற்று அதன்மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் பின்னணியில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இரண்டாம் நிலைத்தரவுகள் கல்முனை மாநகர சபையில் பெறப்பட்ட மருதமுனைப் பிரதேசத்தின் சனத்தொகை பரம்பல், பொருளாதாரம் என்பனவற்றை , அடிப்படையாகக்கொண்ட புள்ளிவிபரங்கள் என்பனவற்றினூடாகவும் இணையத்தளம், நூல்கள் என்பவற்றின் மூலமும் பெறப்பட்டன. மேற்கூறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வானது ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு யாசகம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதில் உள்ளடக்கப்பட்டுள்ள தலைப்புக்கள் ஆய்வின் கருதுகோளுடன் தொடர்புபட்ட தகவல்களை அடிப்படையாயாகக் கொண்டவையாகவே உள்ளன. இவ்வாய்வின் மூலம் முஸ்லிம் சமூகத்தில் யாசகம் அதிகரிக்கின்றது என்றும் அதனால் முஸ்லிம் சமூகமானது பல்வேறு பாதகமான விளைவுகளையும் கண்டு வருகின்றமை குறித்த தகவல்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இவ்வாய்வின் மூலம் யாசகம் பெறுவது அதிகரிப்பதற்கான காரணங்களை அலசப்பட்டுள்ளதுடன் யாசக அதிகரிப்பு வீதமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அது எந்தளவு சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறது என்பதை கணிப்பிடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யாசகர்களின் வருகை விபரம், சமூகக் கட்டமைப்பில் ஏற்படுத்தும் பாதகமான விளைவுகள், யாசகர்களின் உளச் சிந்தனை, யாசக ஒழிப்பில் ஸகாத் நிதியத்தின் வகிபாகம், வறுமை ஒழிப்பிற்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகள் என்பவைகள் அவதானிப்புக்கள் மற்றும் நேர்காணல் பெறப்பட்வை மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் யாசக ஒழிப்பிற்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் யாசக ஒழிப்பானது பெரும் சவாலான விடயமாகவே உள்ளது. எனவே கருதுகோளினை மெய்ப்பிக்கும் வகையில் இவ்வாய்வானது சிறப்புற அமைய எல்லா வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாய்விலிருந்து யாசகம் முஸ்லிம் சமூகத்தில் அதிகரிக்கிறது என்பதும் அதனால் சமூகம் பாரிய விளைவுகளை எதிர்நோக்குகின்றது என்பதும் ஓரளவு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.