| dc.description.abstract |
மனித வாழ்வின் அனைத்துச் செயற்பாடுகளும் நேரத்தை மையமாக வைத்தே அமைந்துள்ளன. மனிதன் தனது ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் இழைப்பாறுவதற்காகவும் காலத்தின் ஒரு பகுதியை ஓய்வுக்காக ஒதுக்கிக்கொள்கிறான். இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியின் பின்னணியில் ஓய்வு நேரத்தை கழிப்பதெற்கென பல்வேறான பொழுதுபோக்கு விடயங்கள் வளர்ந்து வருவதுடன் அதன் பயன்பாடும் அதிகரித்துள்ளன. இந்நிலை முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் ஊடுறுவியுள்ளது. சில நேரங்களில் இஸ்லாமிய வரையறைகளை தாண்டிய பொழுதுபோக்கு விடயங்கள் குடும்பத்தில் பல பிரச்சினைகளுக்கும் வித்திடுகின்றன. இந்தவகையில் ஓய்வுநேரத்தை கழிப்பதில் சம்மாந்துறை பிரதேச முஸ்லிம் இல்லத்தரசிகள் கொண்டுள்ள ஈடுபாட்டினை கண்டறிந்து அவை குடும்ப கட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை ஆராயும் நோக்கங்களைக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அளவு சார் முறையியலைக் கொண்டு முதலாம் நிலைத் தரவுகளுக்காக சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட செந்நெல் கிராம சேவக பிரிவுகளில் வாழும் (1541) முஸ்லிம் குடும்பங்களில் 135 முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரம் எழுமாற்று விகிதத்தில் தெரிவுசெய்யப்பட்டு வினாக்கொத்துக்கள் கையளிக்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளதுடன் அவை விபரிப்பு புள்ளி விபரியல் மூலம் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. மேலதிகமாக நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தளம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆவணங்கள் என்பன இரண்டாம் நிலைத்தரவுகளாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாய்வின் கண்டுபிடிப்புக்களாக, முஸ்லிம் பெண்கள் ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி, இணையத்துடன் ஈடுபடல், இசை, சமயலில் ஈடுபடல், வாசிப்பு மற்றும் எழுத்துருவாக்கம் போன்ற உட்புற செயற்பாடுகளிலும் சுற்று சூழலுடனான தொடர்பு, உடற்பயிற்சி, உறவினர்கள் மற்றும் அயலவர்களுடன் உரையாடுதல்,குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருத்தல்,வீட்டுத்தோட்டம் போன்ற வெளிப்புற செயற்பாடுகளிலும் குர்ஆன் ஓதுதல், மனனம், அழைப்பு பணியில் ஈடுபடல், சுன்னத்தான விடயங்கள் மற்றும் மார்க்க விடயங்கள் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளுதல் போன்ற இஸ்லாமிய கலாசார விடயங்களிலும் ஈடுபாடு கொண்டுள்ளார்கள். இருப்பினும், தொலைக்காட்சியுடனான ஈடுபாடு, இணையப்பாவனை, வீணான உரையாடல் என்பன உயர்வான ஈடுபாடுகளாக கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளினால் குடும்பத்தில் பிள்ளைகளின் கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போன்ற விடயங்கள் கவனிக்கப்படாமை, கணவன்-மனைவி உறவில் விரிசல், வீட்டுக்கடமைகள் முறையாக நிறைவேற்றுப்படாமை, வணக்கவழிபாடுகளை நிறைவேற்றுவதற்கான சூழல் காணப்படாமை இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளுக்கு முறணான சூழல் காணப்படல் போன்ற விடயங்கள் முஸ்லிம் பெண்களின் ஓய்வு நேர செயற்பாடுகளினால் குடும்ப கட்டமைப்பில் ஏற்படும் தாக்கங்களாக கண்டறியப்பட்டுள்ளதுடன் ஆய்வின் முடிவில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளும் எதிர்கால ஆய்வுகளுக்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன. |
en_US |