Abstract:
"இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாகரத்தும் அதன் நடைமுறையும்: பொலன்னறுவை காழி நீதிமன்றத்தை மையப்படுத்திய ஆய்வு" எனும் தலைப்பினை மையமாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம்களை ஆளும் தனியார் சட்டமானது ஓர் ஆள் சார் சட்டமாகும். இச்சட்ட ஏற்பாடுகள் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் மற்றும் இலங்கை முஸ்லிம்களது வழக்காறுகளின் கலவையாகும். பொதுவாகவே தனியார் சட்டமானது இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணான ஒரு சில அம்சங்களைக் கொண்டுள்ளது. 1951ஆம் ஆண்டின் முஸ்லிம் திருமணம், மன நீக்கச் சட்டத்தின் பிரிவு 47(1) ஆனது கணவன் அல்லது மனைவியினால் கோரப்படும் விவாகரத்தை (தலாக், பஸஹ்) பெற்றுக் கொடுக்கும் நியாயாதிக்கத்தினை காழி நீதிபதிக்கே வழங்கியுள்ளது. காழி நீதிமன்றங்களானவை முஸ்லிம்களின் விவாகம், விவாகரத்து விடயங்களில் தனிப்பட்ட நியாயாதிக்கத்தினைக் கொண்ட நீதி அலகாகும். இன்று இக்காழி நீதிமன்றங்களில் விவாகரத்து தொடர்பில் நடைமுறை ரீதியிலான பல முறைகேடுகள் இடம் பெறுகின்றன. ஆய்வுப் பிரதேசமான பொலன்னறுவை மாவட்டத்தில் இயங்கி வரும் காழி நீதிமன்றத்தின் விவாகரத்து தொடர்பான சட்டத்தின் நடைமுறையை பரிசீலித்து, விவாகரத்து சட்ட ஏற்பாடுகள் குறித்த இஸ்லாமியப் பார்வையினை தெளிவுபடுத்துவதனையும் நோக்கங்களாகக் கொண்டு இவ்வாய்வு அமையப் பெற்றுள்ளது. இவ்வாய்விற்கான தரவு சேகரிப்பானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்பு முறைகளைக் கொண்டமைந்துள்ளது. இவ்வாய்வினை திறம்பட மேற்கொள்வதற்காக முதலாம் நிலைத் தரவுகளாக வழக்கு ஆய்வுகள்,நேர்காணல் போன்ற பண்புசார் முறைகள் பயன்படுத்தப்பட்டு, பெறப்பட்ட தகவல்கள் ஒப்பீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகள் கோட்பாட்டு விடயங்களை முன்வைப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வினூடாக இலங்கை முஸ்லிம் திருமணம், மண நீக்கச் சட்டத்தில் விவாகரத்து தொடர்பான சட்ட ஏற்பாடுகள் ஆராயப்பட்டு பொலன்னறுவை காழி நீதிமன்றத்தில் விவாகரத்து சட்ட நடைமுறையில் காணப்படும் ஒரு சில முறைகேடுகளும், ஷரீஆவிற்கு முரணான சில சட்ட அம்சங்களும் கண்டறியப்பட்டுள்ளன.