Abstract:
பலதாரமணம் பற்றி உலகளவில் பல்வேறுபட்ட ஆய்வுகளும், விமர்சனங்களும் வெளிவந்த வண்ணமே உள்ளன. பலதாரமண நடைமுறை பெண்களின் உரிமைகளை மீறுவதாக சில குழுக்கள் கூறுகின்றன. மறுபுறம் குர்ஆனிய உரையில் எழுதப்பட்ட அனைத்தும் நியாயமானவை என்றும் மற்ற குழுக்கள் நம்புகின்றன. இருப்பினும் பலதாரமணத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகளே அதிகம் என்று பல ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. இன்னும் இலங்கை முஸ்லிம் தனியார் சட்டமும் பலதாரமணம் குறித்த ஒழுங்குகளையும் சட்டத்தில் குறிப்பிடுகின்றது. இஸ்லாம் பெண்களின் பாதுகாப்பையும் நல் வாழ்வினையும் பற்றி அதிக அக்கறை கொண்டுள்ள மார்க்கம் ஆகும். அந்தடிப்படையில் பலதாரமணத்தினை சில சூழ்நிலைகளின் கீழும் பல நிபந்தனைகளின் அடிப்படையிலும் அனுமதித்து இருக்கின்றது. இஸ்லாத்தில் பலதாரமணம் பற்றிய கிண்ணியா முஸ்லிம் பெண்களின் கருத்து நிலையை இணங்காணுதலும் அதனை இஸ்லாமிய நோக்கில் பகுப்பாய்வு செய்வதுமே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ் ஆய்வுக்காக முதல் நிலைத் தரவாக குறிக்கோள் மாதிரி அடிப்படையில் நேர்காணலுக்காக 50 முஸ்லிம் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். இரண்டாம் நிலைத்தரவுகளாக இஸ்லாமிய இலக்கிய மீளாய்வுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகள் குறியீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு வரைபுகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்களால் திருமணத்துக்கான ஒழுங்குகளும் அணுகுமுறைகளும், ஒழுங்காக பேணப்படாமையும், தனது கணவன் தனக்கு மட்டுமே உரியவன் எனும் ஆழ்ந்த நம்பிக்கைகளும் பலதாரமணம் குறித்த எதிர்மறையான கருத்தமைவுக்கு காரணமாக அமைகின்றன. மேலும், கிண்ணியாவில் பலதாரமணமானது அநேகமான பலதார குடும்பங்களில் பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளதுடன், பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் பலதாரமணம் குறித்து எதிர்மறையான கருத்துக்களையும் கொண்டுள்ளனர் என்பதும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளாகும். ஆய்வு தொடர்பிலான சிபாரிசுகளும், இஸ்லாம் கூறும் பலதாரமணமானது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. என்பதனையும் தெளிவுபடுத்தியுள்ளதால் இவ்வாய்வானது முக்கியம் பெறுகிறது.