Abstract:
முஸ்லிம்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் மணமுறிவுகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய ரீதியில் அதனை அணுக போதிய அறிவின்றி காணப்படுவதால் சமூக, குடும்ப மற்றும் பொருளாதார ரீதியில் விதவைகள் பல எதிர்மறையான பாதக விளைவுகளுக்கு உள்ளாகின்றனர். அன்றாட வாழ்வில் ஏற்படும் எவ்வித சவாலாக இருப்பினும் அதனை முகங்கொடுத்து வெற்றி கொள்ளும் செயன்முறையில் இஸ்லாத்தின் வகிபாகம் இன்றியமையாதது. அந்த வகையில் விதவைகள் குறித்த உரிமைகள் மற்றும் நடைமுறை சவால்களை பரிசீலித்து அவைகள் தொடர்பாக இஸ்லாம் கொண்டிருக்கும் எண்ணக்கருவினை விளக்கும் நோக்கோடு இலங்கையின் மேல்மாகாணத்தில் ஆன்மீக ரீதியில் வலுப்படுத்தப்பட்ட, முஸ்லிம்கள் செறிந்து ஓரளவு சுதந்திரமாக வாழும் பேருவளைப் பிரதேசத்தினை மையப்படுத்தி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்பு மற்றும் அளவு சார் ஆய்வு வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வுக்காக முதலாம் நிலத்தரவுகளாக பிரதேசத்து காதி நீதிமன்ற நீதவானின் அறிக்கைப்படி 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் விவாகரத்து பெற்ற 255 பெண்களில் குடித்தொகை மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 152 பேரிடம் வினாக்கொத்து வழங்கப்பட்டு Ms Excel 365 ஊடாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அத்தோடு அவர்களில் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட 8 பேரிடமும் சமூகத்தில் மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், பள்ளி நிர்வாகிகள் போன்றோரில் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட 5 பேரிடமும் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பெறப்பட்ட தரவுகள் குறியீட்டு முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வின் கோட்பாட்டு ரீதியான தகவல்களைப் பெற தலைப்புடன் தொடர்புபட்ட ஆய்வுக்கட்டுரைகள், ஆவணங்கள், நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தள தகவல்கள் போன்ற இரண்டாம் நிலைத்தரவுகளும் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டன. பேருவலைப் பிரதேச முஸ்லிம் குடும்பங்களில் மீள்விவாக நடைமுறை குறைந்து காணப்பட பிரதான காரணியாக இஸ்லாம் மீள்விவாக உரிமைக்கு வழங்கிய முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து மக்கள் அறியாமல் இருப்பதாகும். விவாகரத்துப் பெற்று தனிமையில் வாடும் பெண்கள் தனி நபர் , சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றனர். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக மீள்விவாகம் அமையப்பெறும் என்பது இவ்வாய்வின் பிரதான பரிந்துரையாகும். மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வு மீள்விவாகம் குறித்த நடைமுறையினை கண்டறிந்து அது தொடர்பில் சமூக மட்ட விழிப்புணர்வை மேற்கொள்ள உறுதுணையாக அமையவல்லது என்பது ஆய்வாளனின் உறுதியான நம்பிக்கையாகும்.