| dc.description.abstract |
புலமைச் சொத்துரிமை என்பது மனித மூளையினால் உருவாக்கப்படும் ஆக்கம் ஒன்றிற்கான உரிமையாகும். இவ்வகைச் சொத்துக்களைச் சார்ந்ததே பதிப்புரிமையாகும். பிற சொத்துக்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதைப் போன்று புலமைச் சொத்துக்களுக்கு பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ்; சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. உலகில் நாளுக்கு நாள் பல கலை, இலக்கிய விஞ்ஞான வேலைகள் வெளிவந்த வண்ணம் உள்ளதுடன் இவற்றிக்கு சட்டத்தின் கீழ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றது. இன்று பாடசாலை மாணவர்கள் முதல் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் வரை காணப்படும் ஒரு செயற்பாடாக பதிப்புரிமை மீறல்கள் உளளன. இப் பதிப்புரிமை மீறல்கள் சர்வதேச, தேசிய சட்டங்களில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதுடன் இஸ்லாத்தின் பார்வையில் ஒரு மனிதனின் உரிமையின் மீதான அடந்தேறுதலாகும். இவ்விலக்கிய மீறல்களுக்கு பிரதான காரணம் மாணவர்களுக்கு மத்தியில் குறித்த சொத்துக்களின் ஷரீஆ இணக்கப்பாடு பற்றிய தெளிவின்மையாகும். இப்பிரச்சினையை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பதிப்புரிமைச் சட்டம் இஸ்லாமிய ஷரீஆ உடன் இணங்கிச் செல்லும் பாங்கினை கண்டறிதல் என்பதை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பண்பு சார் முறையில் அமைந்த நூலக ஆய்வாகும். இவ்வாய்வு இரண்டாம் நிலை தரவு மூலங்களான சட்ட அறிஞர்களின் அபிப்பிராயங்கள், பத்வாக்கள், இஸ்லாமிய பிக்ஹ் நிறுவனங்களின் இஜ்திஹாத்கள், ஆய்வுக்கட்டுரைகள், இணைய ஆக்கங்கள், கட்டுரைகள், நூல்கள் மற்றும் இதர வெளியீடுகளில் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. திரட்டப்பட்ட தகவல்களின் படி இலங்கையில் அமுலில் உள்ள 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க பதிப்புரிமைச் சட்டம் பெரும்பாலான இடங்களில் இஸ்லாமிய ஷரீஆவுடன் இணங்கிச் சென்றாலும் சில இடங்களில் முரண்படுவதாக காணப்படுகின்றது. அவ்வாறு முரண்படும் இடங்களாக இஸ்லாமிய ஷரீஆ தடுத்துள்ள இசைப்படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்குகின்றமை, நிழள் படங்களுக்கும், ஓவியங்களுக்கும் சிற்பக் கலைகளுக்கும் பதிப்புரிமை வழங்குகின்றமை, இறை நிராகரிப்பின் பால் இட்டுச் செல்லும் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்குகின்றமை, பதிப்புரிமை வழங்கப்படும் கால அளவு, உரிமைகளைப் பறிமாற்றல் மற்றும் உரிமம் வழங்கல் போன்றவற்றில் உரிமைகள் தெளிவாக வரையறுக்கப்படுவதையும் காலம் குறிப்பிடப்படுவதையும் தேவைப்பாடாக கொள்ளத் தவறியுள்ளமையும் குறிப்பிட முடியும். இவ்வாய்வு எதிர்கால ஆய்வாளர்களுக்கும், உயர்கற்கையை தொடரும் மாணவர்களுக்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும் என்பது ஆய்வாளனின் நம்பிக்கையாகும். |
en_US |