Abstract:
இஸ்லாம் ஆண் பெண் ஆகிய இரு பாலாரினதும் உடலமைப்பைக் கருத்திற் கொண்டு பிரத்தியேகமான ஆடை ஒழுங்கை பரிந்துரைத்துள்ளது. அந்த வகையில் இஸ்லாம் பரிந்துரைக்கும் ஆடை ஒழுங்கின் நடைமுறை தொடர்பான பரிசீலனை அவசியமாகும் என்ற வகையில் இவ்வாய்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பான நடைமுறையை பரிசீலித்து, அது தொடர்பான இஸ்லாமிய நோக்கினை விளக்குகின்றது. கலப்பு முறையில் அமைந்துள்ள இவ்வாய்வில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்திற்குள் அமையப்பெற்றுள்ள ஐந்து பீடங்களையும் சேர்ந்த மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கக்கூடிய 739 மாணவிகளுள் எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட 253 மாணவிகளுக்கு வினாக்கொத்து வழங்கப்பட்டும், இன்னும் பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்களில் நோக்க மாதிரி அடிப்படையில் எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட 10 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலூடாகவும் இவ்வாய்வுக்கான முதலாம் நிலை தரவுகள் திரட்டப்பட்டன. இவ்வாய்வின் கோட்பாட்டுக் கட்டமைப்பை நிறுவ நூல்கள், ஆய்வு கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தள தகவல்கள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டன. வினாக்கொத்தூடாகப் பெறப்பட்ட தரவுகள் MS Office 365 ஊடாகவும், நேர்காணல் ஊடாக பெறப்பட்ட தரவுகள் குறியீட்டு முறையிலும், இரண்டாம் நிலை தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்வு முறையிலும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவிகள், பெண்களின் ஆடை தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டம் குறித்து போதிய தெளிவை பெற்றிருந்த போதும், பல்கலைக்கழக கலாசார தாக்குரவினால் தமக்கான பிரத்தியேகமான ஆடை அமைப்பை கடைபிடிக்கின்றனர் என்பதே இவ்வாய்வின் பிரதான கண்டுபிடிப்பாகும். இஸ்லாம் பெண்களின் ஆடை ஒழுங்கில் பிரத்தியேகமான நிறத்தை பரிந்துரைக்காமையினால் கருப்பு நிறத்தினாலான ஆடைகளை குறைப்பது பல்கலைக்கழக சூழலுக்கு பொருத்தமானதாகும் என்பதும் இவ்வாய்வினூடாக கண்டறியப்பட்டது. இவ்வாய்வு முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டத்தையும் இன்றைய நடைமுறைகளையும் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த உறுதுணையாக அமையவல்லது.